10 June 2006

கனா காணும் காலங்கள் - தேன்கூடு போட்டி

"ஏம்பா,நீ இன்னைக்கு கணக்கு ட்யூஷன் போகலியா?"

"இல்லையே அங்கிள்.இப்போ தான் ட்யூஷன் விட்டு வந்தேன்.கல்பனாவுக்கு ஒடம்புக்கு சரியிலீங்களா?இன்னைக்கு ட்யூஷனுக்கு வரலை.மாஸ்டர் கூடக் கேட்டாரு."

"என்னது ட்யூஷனுக்கு வரலையா??? என்ன தம்பி சொல்ரே? ட்யூஷன்ல இன்னைக்கு கொஞ்சம் லேட் ஆகும்னு சொல்லீட்டுக் காலைலயே கெளம்பீட்டாளே.அப்படி ட்யூஷனுக்கு வாராம எங்க போயிருப்பா?ஒண்ணுமே புரியலையே.எதுக்கும் போய் அவ பிரண்ட் சில்வியா வீட்டுக்குப் போய் பார்க்கரேன்."

அது சரி...நீங்கள் கல்பனாவைப் பார்த்திருக்கிறீர்களா?

வலது பக்கத் தெற்றுப்பல் மற்றும் சிரித்தால் விழும் கன்னக்குழிகள் கொண்டு எங்கள் பள்ளியை ஆண்டு வந்த தேவதை. எங்கள் பத்தாம் வகுப்பு "ஆ" பிரிவில் எப்போதும் முதல் மூன்று ராங்குகளுக்குள் வாங்கி வந்த கல்பனா, அரையாண்டு விடுமுறையின் போது பஸ் கண்டெக்டருடன் வீட்டை விட்டு ஓடிப் போய் திருமணம் செய்துகொண்டாள்.

"அவ எங்களுக்குப் பொண்ணே இல்லை.அவ வந்தாலும் சேர்த்துக்க மாட்டோம்.நாங்களும் போய்ப் பார்க்க மாட்டோம்." என்று இறுகிக் கிடந்த பெற்றோர்களின் சகிதம் கல்பனாவைக் குழந்தைகளுடன் போன வாரம் சாரதாம்பாள் கோயிலில் பார்த்தேன்.ஆள் பருத்துப் போய் கண்ணில் கருவளையம் விழுந்து....சே..அது கல்பனாதான் என்று நம்பவே முடியவேயில்லை..தேவதைகளுக்கும் வயதாகும் போல.

பள்ளியில் படிக்கும் போது "காதல்" குறித்து ஏற்பட்ட முதல் அனுபவம் அது. இரண்டாவது அனுபவம் சற்றே விநோதமானது.

நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது எனக்கு நெருங்கிய நண்பன் ஒருவன்.என் வகுப்பில் படித்த ஒரு பெண்ணுக்கும்,அவனுக்கும் தெய்வீகக் காதல்."வேண்டாம்பா.ப்ராப்ளம் வரும்...அந்தப் பொண்ணு 2 வருஷம் இருந்து மெடிக்கல் சீட்டுக்கு ட்ரை பண்ணி இம்ப்ரூவ்மெண்ட் முடிச்சுட்டு இப்போ இங்க வந்திருக்கு.உன்னை விட வயசில பெரியவங்க.இதெல்லாம் நமக்கெதுக்கு...?"நான் சொன்ன மறுநாளில் இருந்து அவன் என்னிடம் இருந்த நட்பைக் கொஞ்சம் அடக்கி வாசிக்கத் துவங்கினான்.

சில மாதங்கள் கழித்து அவன் என்னிடம் வந்து "ஒரு மேட்டர் பேசணும்.எனக்குக் கொஞ்சம் ப்ராப்ளம்...." என்றான்.என் வகுப்புத் தோழி அவளுக்கும் என் நண்பனுக்கும் ஏற்பட்ட காதலை வீட்டில் சொல்லியிருக்கிறாள்.அவள் மாமா ஒருத்தர் பையன் யாரென்று பார்க்கக் கல்லூரிக்கே வந்து விட்டார்.வந்தது மட்டுமல்ல,என் நண்பனைச் சந்தித்து,"தம்பி,உங்க வீட்டில பேசறோம்.கல்யாணத்தை வேண்டுமானால் படிப்பு முடிந்ததும் வச்சிக்கலாம்" என்று சொல்லியிருக்கிறார்.என் நண்பனின் உடலில் இருந்த அத்தனை உறுப்புகளும் வாய் வழியே வந்து விட்டது.

"ஐயோ..எங்க வீட்டில இவர் போய் பேசினால் என்ன நடக்கும் ! ப்ளீஸ் மச்சி...டூ சம்திங்.டெல் ஹெர் டு ஃபர்கெட் மீ..."அழாத குறையாகச் சொன்னான்.

"நான் எத்தனை வருஷமானாலும் காத்திருக்கேன்..." என்றது அந்த நங்கை.

"வேண்டாம்மா...நீ இப்பவே எங்களை விட வயசில பெரிசு.உன் வீட்டில சொல்லி சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ.இவனை விட்டிடு..."என்று ஒரு வழியாகப் பேசி முடித்தோம். கல்லூரியில் கேண்டீனில் வைத்து முதல் ஆண்டு நண்பனை மாப்பிள்ளை பார்க்கப்பட்ட அனுபவம் அனேகமாக உங்களில் யாருக்கும் ஏற்பட்டிருக்காது என நினைக்கிறேன்.சரி அதனால் என்ன?யூனிவர்சிட்டி ரேங்க் வாங்கித் தேற வேண்டிய அவன் வேண்டுமட்டும் கப்புகள் வாங்கி அவதியுற்றது தான்.

பெரும் கோ-கோ வீரனாக வருவான் என எதிர்பார்க்கப்பட்டவனும் காதலுக்காக வீட்டை விட்டு ஓடிப்போய் தற்போது மெஸ் வைத்து நடத்திவருபவனுமான எனது பள்ளிக்கூட சீனியர் சரவணன்,ஆண்டுக்கொன்றாய் ஆடைகளை மாற்றுவதைப் போல காதலர்களை மாற்றிப் பின் பெற்றோர் பார்த்து வைத்த மாப்பிள்ளையைக் கை பிடித்து இரு குழந்தைகளுக்குத் தாயாகியுள்ள அர்ச்சனா,சொத்துக்காகக் காதலித்துத் தற்போது மாமனார் வீட்டில் (சுயமரியாதையை இழந்து)ஏவலாளாயுள்ள ஒரு தோழன் என் சங்கிலித் தொடர் போலே நீளும் நான் கண்ட அடலசண்ட் காதல்களின் எண்ணிக்கை.

வளர்சிதை மாற்றப் பருவத்துக் காதலை அடிப்படையாக வைத்து வந்த "அலைகள் ஓய்வதில்லை","வைகாசி பொறந்தாச்சு" போன்ற படங்கள் எவ்வ்ளவு பேரைப் பாதித்ததோ...அனுபவபூர்வமாக நான் கண்டு,பழகிய,வியந்த பல மனிதர்களை(மேலே சொன்னது போக) நிறையப் பாதித்தது.

அது சரி காதல் என்பது என்ன?

காமம் என்பது ஆபாசமான சொல் என்று கருதி இலக்கியவாதிகள் கண்டுபிடித்த இடக்கரடக்கல் தான் காதல்."செத்துப் போயிட்டர்" என்பதை "சிவலோக பதவியடைந்தார்" என்பது மாதிரிதான் காமம் காதலானது.காதலுக்கென்றே தனி அகராதி உண்டு.அதன் பொருள் ஆளுக்கு ஆள் மாறுபடும்.

அடிப்பம்பில் தண்ணியடிக்கக் கஷ்டப்படும் போது "ஐயோ..பாவம்" என்று ஒரு குடம் அடித்துக் கொடுத்தவனும்,வழக்கமாய்ச் செல்லும் பேருந்தில் சில்லறையின்றித் தவிக்கும் போது "உங்களுக்கும் சேர்த்து டிக்கட் வாங்கிட்டேன்" என்று உதவிக்குரல் கொடுத்தவளும் அதைக் காதல் என்று அர்த்தப்படுத்திக் கொள்ளுவதுண்டு.தன்னை உணரும் பருவத்தில்,இன்னொருவரால் வித்தியாசமான பார்வையில் கவனிக்கப்படுகிறோம் எனும் போது,மனதில் ஏற்படும் குறுகுறுப்பைக் காதல் என்று கற்பிக்கிறது வயது.

எனக்குத் தெரிந்த வரையில் பெரும்பாலும் வளர்சிதை மாற்றத்தில் ஒருவரது வீழ்ச்சிக்குப் பெரிதும் காரணமாய் இருப்பது பாலினக்கவர்ச்சியைக் காதல் என்று நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வது தான்.பத்தாவது வரை ஒழுங்காய்ப் படித்தவர்கள் பன்னிரண்டாம் வகுப்பில் காதல் வலையில் சிக்கிய கதை ஏராளம்.என்னையும் சேர்த்துத் தான்.

வளர்சிதை மாற்றப் பருவ காலத்துக் காதல் பற்றிய எனது அனுபவங்கள்,அதன் மூலமான புரிதல்கள் பெரும்பாலும் கசப்பாகவே இருந்ததால் கல்லூரிக்காலங்களில் உள்ளுக்குள் ஒரு வித எச்சரிக்கை ஒலித்துக் கொண்டே இருந்தது.படித்து முடித்து வேலையில் சேர்ந்த பின்னர் கொல்லுவதற்கு நிறைய மணித்துளிகள் இருந்தன.பல சந்தர்ப்பங்களில்,"நாம் பொய்யோ..எதன் பெயராலோ இயற்கை உணர்வுகளுக்கு மாறுபட்டு வாழ்வதும் ஒரு சாடிஸம் தானோ" என்று ஆன்ம விசாரணை செய்து கொண்ட நிமிடங்கள் உண்டு.ஆனால் அடலசன்ட் காதல்கள் பற்றிய எனது கணிப்பு என்றுமே பொய்த்ததில்லை.வாழ்க்கையின் சில வருடங்களைக் கடந்த பின்னர் "எதையோ இழந்துவிட்டோமோ?" என்று மனம் கேட்டது.ஆனால் எதுவுமே இழக்கவில்லை என்றே என் புத்தி எனக்குச் சொன்னது.இந்த ரஸவாதம் நடக்காத மனம் ஏது என்று அப்புறப்படுத்தி விடுவேன்.

அடலசண்ட் காதல் கொடுத்த வலியால் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் தம்பிமார்களுக்கு,"சரி போனது போகட்டும்.காதலை மட்டுமல்ல,உங்களின் அத்தனை உறவுகளையும் இறுக்கமாக்கிக் கொள்ளுங்கள்.வாழப் பிடிப்பதற்கு அதுதான் ஆதாரம்.காயங்கள்,இழப்புகள்,பிரிவுகள்.....யாருக்கு இல்லையென்று சொல்லுங்கள்? பூக்கள் எவ்வளவு மலர்ந்து உதிர்ந்தாலும் வாசம் உண்டு.மேகங்கள் எத்தனை கடந்து போனாலும் வானம் உண்டு.வாழ்க்கையும் தானே...."

"எல்லாம் சரிதாங்க..சொல்றதுக்கும் கேக்கரதுக்கும் இது எல்லாம் ரொம்ப நல்லாத் தான் இருக்கு.புதுசாப் பொண் கொழந்தை பொறக்கிற உங்க சகாக்கள் கிட்ட எல்லாம் ஏன் அனிதான்னு பேர் வைக்க சொல்லி சஜஸ்ட் செய்யறீங்க???உங்க அடுத்த கதையோட நாயகி பேரு கூட அனிதாவாமே??இன்னா மேட்டர் அது.???.." என்று நிறுத்தி என்னை கேள்வி கேட்கத் தோன்றுகிறவர்களுக்கு மட்டும்
" நீங்க காதலிச்சிட்டு இருக்கீங்களா.... என்னோட வாழ்த்துகள்!"

34 Comments:

Unknown said...

நல்லா இருக்கு. ஆனால் கொஞ்சம் வேகமா ஓடுற மாதிரி தோற்றம்.

வெற்றிப் பெற வாழ்த்துகள்.

நிலா said...

ம்ம்... கட்டுரையின் பொருள் நன்றாக இருந்தாலும் கட்டுரை கோர்வையாக இல்லாதது போன்ற உணர்வு.

//தன்னை உணரும் பருவத்தில்,இன்னொருவரால் வித்தியாசமான பார்வையில் கவனிக்கப்படுகிறோம் எனும் போது,மனதில் ஏற்படும் குறுகுறுப்பைக் காதல் என்று கற்பிக்கிறது வயது.//

அப்படியானால் பலராலும் இப்படிக் கவனிக்கப் படும்போது ஒருவர் மீது மட்டுமே காதல் வருவானேன்?

//வளர்சிதை மாற்றப் பருவத்துக் காதலை அடிப்படையாக வைத்து வந்த "அலைகள் ஓய்வதில்லை","வைகாசி பொறந்தாச்சு" போன்ற படங்கள் எவ்வ்ளவு பேரைப் பாதித்ததோ...அனுபவபூர்வமாக நான் கண்டு,பழகிய,வியந்த பல மனிதர்களை(மேலே சொன்னது போக) நிறையப் பாதித்தது.//

சத்தியமான உண்மை... நம் திரைப்படங்கள் காதலுக்கு - அதுவும் விடலைக் காதலுக்குத் தந்த (அல்லது தந்து கொண்டிருக்கிற) ஹைப் ஓவரோ ஒவர்

//உன்னை விட வயசில பெரியவங்க.இதெல்லாம் நமக்கெதுக்கு...?"//

அந்த வயதில் உலக ஞானம் அதிகமில்லாத பருவத்தில் நீங்கள் இப்படி நினைத்திருப்பதில் சற்று நியாயமுண்டு. இப்போதாவது மாறி இருக்கும் என நினைக்கிறேன்

//"வேண்டாம்மா...நீ இப்பவே எங்களை விட வயசில பெரிசு.உன் வீட்டில சொல்லி சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ.இவனை விட்டிடு..."என்று ஒரு வழியாகப் பேசி முடித்தோம். //

'இவனை விட்டுடு' - பாவம், இது அந்தப் பெண்ணை எவ்வளவு காயப்படுத்தி இருக்குமோ. பெரும்பாலும் விரட்டி விரட்டிக் காதலிக்குப்பது ஆண்களாய்த்தானிருக்கும். ஆனால் பிரச்சனை என்று வரும்போது 'விட்டுடு' என்று அந்தப் பெண்ணின் மேல் குற்றத்தைச் சுமத்துவது நம் சமூகத்தில் சகஜம்!!!

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

அனுசுயா said...

கடைசியா என்ன சொல்ல வரீங்கனு புரியல.

G.Ragavan said...

சுதர்சன்....நல்ல கட்டுரை....

பிரச்சனைக்கு வருவோம். அந்த வயதில் வருவது நிச்சயமாக இனக்கவர்ச்சிதான். அது தனக்கு வரவில்லை என்று சொல்ல யாராலும் முடியாது. எல்லாரும் ஒரு முறையாவது காதல் கவர்ச்சியில் விழுந்திருப்போம். குறைந்த பட்சம் ஒருதலையாகவாவது.

காதல் எப்பொழுது புனிதமாகிறதோ...அப்பொழுதே அது ஆராதிக்கப்பட்டு கோயில் எழுப்பப்பட்டு பலியும் இடப்படும். ஆகையால் காதலில் இருக்கும் புனிதத்தை எடுத்து விட்டு...அதுவும் பசி வேளையில் கடையில் ரெண்டு இட்லி வாங்கித் தின்பது போலத்தான் என்று ஆகுமானால் கோயில் உடைந்து கோபுரம் உடைந்து ஆராதனைகள் நின்று பலிகள் விழுவதும் நின்று போகும்.

ஆனால் பண்பாடு என்பதைப் பெண் மீது மட்டும் ஏற்றி வீண் கூச்சல் போடும் போலிச் சமுதாயங்களில் இதெல்லாம் நடப்பது கடினமே.

சிக்கன் 65 சாப்பிடும் ஆசையிருக்கிறது. ஆனால் சாப்பிடாமல் அதைப் பார்த்துக் கொண்டேயிருந்தால் ஆசை பெருகிப் பெருகித் துன்புறுத்தும். எப்பொழுதும் அதே நினைவாக இருக்கும். கனவில் வரும். எங்கு பார்த்தாலும் சிக்கன் 65வாகத் தோன்றும். வேறு யாராவது சிக்கன் 65 சாப்பிட்டால் எரிச்சலாக வரும். நம்மால் ஒரு வேலையையும் உருப்படியாகப் பார்க்க முடியாது. இதில் சிக்கன் 65 என்பதை காதல்-காம விருப்பம் என்று கொள்ளுங்கள். எல்லாம் பொருந்தி வரும்.

படக்கென்று சிக்கன் 65 வாங்கி நச்சு நச்சு என்று மென்று தின்று விட்டால்...ஆசை அடங்கி விடும். அடுத்த வேலையப் பார்க்கலாம். அவ்வளவுதான். இதுக்குப் போயி பலரு என்னென்னவோ செஞ்சுக்கிறாங்க...

சிறில் அலெக்ஸ் said...

//
படக்கென்று சிக்கன் 65 வாங்கி நச்சு நச்சு என்று மென்று தின்று விட்டால்...ஆசை அடங்கி விடும். அடுத்த வேலையப் பார்க்கலாம். அவ்வளவுதான். இதுக்குப் போயி பலரு என்னென்னவோ செஞ்சுக்கிறாங்க...//
:)

பினாத்தல் சுரேஷ் said...

நல்லாத்தான் இருக்கு சுதர்சன். As of now என் ஓட்டு இதுக்குதான்:-)

பொன்ஸ்~~Poorna said...

சுதர்ஸன்,
இனக் கவர்ச்சியைக் காதல்னு சொல்லி எழுதி இருக்கீங்க.. !! நிலா சொல்வது போல் கொஞ்சம் கோர்வையும் குறைவு..

நான் ஆசைப் பட்டு கேட்டதுக்கு உங்களைப் பத்தியே கிசுகிசுவும் சொல்லியாச்சு போலிருக்கே..:)

பிஞ்சிலேயே பழுத்த ஆன்மிகச் செம்மல் ராகவன்,
//படக்கென்று சிக்கன் 65 வாங்கி நச்சு நச்சு என்று மென்று தின்று விட்டால்...ஆசை அடங்கி விடும். அடுத்த வேலையப் பார்க்கலாம். அவ்வளவுதான்//
நீங்க இப்படிச் சொல்வீங்கன்னு நினைக்கவே இல்லை!!.. ரெண்டு திருப்புகழைச் சத்தமா பாடினா எல்லா பிரச்சனையும் காணாம போய்டும்னு சொல்லுவீங்கன்னு நினைச்சேன் ... :))))

Unknown said...

//படக்கென்று சிக்கன் 65 வாங்கி நச்சு நச்சு என்று மென்று தின்று விட்டால்...ஆசை அடங்கி விடும். அடுத்த வேலையப் பார்க்கலாம். அவ்வளவுதான். இதுக்குப் போயி பலரு என்னென்னவோ செஞ்சுக்கிறாங்க...//

தலைவா, அதுக்கு மேலேயும் சில விஷயங்கள் இருக்கு. சரி விடுங்க, அவரவர்க்கு ஒவ்வொரு விதமான பார்வை :-)

துளசி கோபால் said...

எதுவுமே கிடைக்கறவரைக்கும்தான்.
கிடைச்சுட்டா... அப்புறம் வேற ஒரு தேடல்.

வெற்றி பெற வாழ்த்து(க்)கள்.

ilavanji said...

//பல சந்தர்ப்பங்களில்,"நாம் பொய்யோ..எதன் பெயராலோ இயற்கை உணர்வுகளுக்கு மாறுபட்டு வாழ்வதும் ஒரு சாடிஸம் தானோ" என்று ஆன்ம விசாரணை செய்து கொண்ட நிமிடங்கள் உண்டு//

இதிலிருந்து யாருமே தப்பமுடியாது என்றுதான் தோன்றுகிறது...

வெற்றிக்கு வாழ்த்துக்கள் சுதர்சன்...

Pavals said...

//காமம் என்பது ஆபாசமான சொல் என்று கருதி இலக்கியவாதிகள் கண்டுபிடித்த இடக்கரடக்கல் தான் காதல்.//

என்ன ஞானம்..என்ன ஞானம்.. ம்ம்.. நடத்து நடத்து..


அப்புறம் அந்த காலேஜ் சமாச்சாரம்.. யாருப்பா அது.. பொதுவா நமக்கு இந்த கிசுகிசுவெல்லாம் புடிக்காதுதான்.. நம்மள பத்தி வந்தா மட்டும்ம் ;)

Unknown said...

இதுவும் நல்லா தான் இருக்கு. வெற்றி யாருக்கோ! வாழ்த்துக்கள்

G.Ragavan said...

// Cyril அலெக்ஸ் said...
//
படக்கென்று சிக்கன் 65 வாங்கி நச்சு நச்சு என்று மென்று தின்று விட்டால்...ஆசை அடங்கி விடும். அடுத்த வேலையப் பார்க்கலாம். அவ்வளவுதான். இதுக்குப் போயி பலரு என்னென்னவோ செஞ்சுக்கிறாங்க...//
:) //

சிறில் இந்தப் புன்னகை என்ன பொருள்?

G.Ragavan said...

// பிஞ்சிலேயே பழுத்த ஆன்மிகச் செம்மல் ராகவன்,
//படக்கென்று சிக்கன் 65 வாங்கி நச்சு நச்சு என்று மென்று தின்று விட்டால்...ஆசை அடங்கி விடும். அடுத்த வேலையப் பார்க்கலாம். அவ்வளவுதான்//
நீங்க இப்படிச் சொல்வீங்கன்னு நினைக்கவே இல்லை!!.. ரெண்டு திருப்புகழைச் சத்தமா பாடினா எல்லா பிரச்சனையும் காணாம போய்டும்னு சொல்லுவீங்கன்னு நினைச்சேன் ... :)))) //

திருப்புகழ் பாடலாம். தப்பேயில்லை. பிரச்சனையும் போகும். உண்மைதான். மறுக்கலை. ஆனா இது பிரச்சனையா? இல்லையே. பசிக்குது. திருப்புகழ் பாடுனா பசி மறக்குது. கொஞ்ச நேரம் கழிச்சிப் பாடிக்கிட்டு இருக்குறப்ப திரும்பப் பசிக்குது. பாட்டை விட சாப்பாட்டுலதான் ஆசை போகும். அதுக்கு ரெண்டு இட்டிலிய கெட்டிச் சட்டினி வெச்சி முழுங்கீட்டு உக்காந்தா பசியும் வராது. பக்தியும் ஒழுங்கா வரும்.

G.Ragavan said...

// KVR said...
//படக்கென்று சிக்கன் 65 வாங்கி நச்சு நச்சு என்று மென்று தின்று விட்டால்...ஆசை அடங்கி விடும். அடுத்த வேலையப் பார்க்கலாம். அவ்வளவுதான். இதுக்குப் போயி பலரு என்னென்னவோ செஞ்சுக்கிறாங்க...//

தலைவா, அதுக்கு மேலேயும் சில விஷயங்கள் இருக்கு. சரி விடுங்க, அவரவர்க்கு ஒவ்வொரு விதமான பார்வை :-) //

நிச்சயமாக. எத்தனை மனங்கள் உண்டோ அத்தனை குணங்கள் உண்டு என்று கண்ணதாசன் எழுதியிருக்கிறார். அது போல எத்தனை கண்கள் உண்டோ அத்தனை பார்வைக் கோணங்கள் உண்டு.

ஜொள்ளுப்பாண்டி said...

//'இவனை விட்டுடு' - பாவம், இது அந்தப் பெண்ணை எவ்வளவு காயப்படுத்தி இருக்குமோ. //

நிலாவை வழிமொழிகிறேன் !!

Sud Gopal said...

//ஆனால் கொஞ்சம் வேகமா ஓடுற மாதிரி தோற்றம்//

ஓ.அப்படியா சொல்றீங்க.அடுத்த முறை கொஞ்சம் கவனமா இருக்கேன்.

ஆமா.ஆளை எங்கே காணோம்? ஏதாவது ஹிபர்னேஷன்ல போய்ட்டீங்களோ?

மற்றபடி வாழ்த்துகளுக்கு நன்றி கேவீஆர்.

Sud Gopal said...

நிலா!வாங்க...வாங்க..

//கட்டுரையின் பொருள் நன்றாக இருந்தாலும் கட்டுரை கோர்வையாக இல்லாதது போன்ற உணர்வு//

ஹூம்.கட்டுரையை இன்னும் கொஞ்சம் செதுக்கியிருக்கலாம்னு தோணுது.நன்றி

//அந்த வயதில் உலக ஞானம் அதிகமில்லாத பருவத்தில் நீங்கள் இப்படி நினைத்திருப்பதில் சற்று நியாயமுண்டு. இப்போதாவது மாறி இருக்கும் என நினைக்கிறேன்.//

ஆமாங்க.முன்னைக்கு இப்போது பரவாயில்லை.

//'இவனை விட்டுடு' - பாவம், இது அந்தப் பெண்ணை எவ்வளவு காயப்படுத்தி இருக்குமோ. பெரும்பாலும் விரட்டி விரட்டிக் காதலிக்குப்பது ஆண்களாய்த்தானிருக்கும். ஆனால் பிரச்சனை என்று வரும்போது 'விட்டுடு' என்று அந்தப் பெண்ணின் மேல் குற்றத்தைச் சுமத்துவது நம் சமூகத்தில் சகஜம்!!!//

அந்தப் பிரச்சினையின் போது நான் உபயோகப்படுத்திய அதே பதத்தினை மாறாமல் கொடுத்திருந்தேன்.மற்றபடி உங்கள் கருத்துகளோடு முற்றிலும் உடன்படுகிறேன்.வளர்சிதை மாற்றத்திற்குப்பின் நான் கற்றுக்கொண்ட விசயங்களில் இதுவும் ஒன்று.

//போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்//

உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.

Sud Gopal said...

//கடைசியா என்ன சொல்ல வரீங்கனு புரியல.//

வளர்சிதை மாற்றத்தில காதலென்னும் போதை வஸ்துவோட மகிமை பத்தித் தான் சொல்ல வந்தேன்(சொன்னதும் கூட).கடைசிப் பேராவை எழுதினது மேலே சொன்ன வஸ்து தந்த ஹேங்ஓவர்ல இருந்து இன்னமும் மீளாத என்னோட மனசாட்சி.

முதல் முறை இந்தப் பக்கம் வந்ததுக்கு தேங்ஸ் மேடம்.

Sud Gopal said...

//எல்லாரும் ஒரு முறையாவது காதல் கவர்ச்சியில் விழுந்திருப்போம். குறைந்த பட்சம் ஒருதலையாகவாவது.//

ஓக்கே..ஓக்கே...

உங்க வாழ்த்துகளுக்கு நன்னி ஜீரா.

நான் சுத்த சைவம்கிறதால சிக்கன்65 பத்தி பெரிசா ஒண்ணும் தெரியாது ;-)

Sud Gopal said...

சிரிப்பானொடு முடித்துவிட்ட சிரில் அலெக்ஸுக்கும்,வாழ்த்திய பெனாத்தலாருக்கும் நன்றி பல.

Sud Gopal said...

பொன்ஸ்:

//நிலா சொல்வது போல் கொஞ்சம் கோர்வையும் குறைவு//

பாயிண்ட் வெல் டேகன் மேடம்.(யானையாருக்கு புதரகத்தில தீனி எல்லாம் ஒழுங்காக் கிடைக்குதா??)

//நான் ஆசைப் பட்டு கேட்டதுக்கு உங்களைப் பத்தியே கிசுகிசுவும் சொல்லியாச்சு போலிருக்கே..:)//

என் கடன் வாசகர் பணி செய்து கிடப்பதே.


//பிஞ்சிலேயே பழுத்த ஆன்மிகச் செம்மல் ராகவன்,{}
நீங்க இப்படிச் சொல்வீங்கன்னு நினைக்கவே இல்லை!!.. ரெண்டு திருப்புகழைச் சத்தமா பாடினா எல்லா பிரச்சனையும் காணாம போய்டும்னு சொல்லுவீங்கன்னு நினைச்சேன் ... :)))) //

ஓவர் டூ ஜீரா.(நாராயண,நாராயண)

Sud Gopal said...

/படக்கென்று சிக்கன் 65 வாங்கி நச்சு நச்சு என்று மென்று தின்று விட்டால்...ஆசை அடங்கி விடும். அடுத்த வேலையப் பார்க்கலாம். அவ்வளவுதான். இதுக்குப் போயி பலரு என்னென்னவோ செஞ்சுக்கிறாங்க...//

தலைவா, அதுக்கு மேலேயும் சில விஷயங்கள் இருக்கு. சரி விடுங்க, அவரவர்க்கு ஒவ்வொரு விதமான பார்வை :-)


ரைட்டேய்...

Sud Gopal said...

//எதுவுமே கிடைக்கறவரைக்கும்தான்.
கிடைச்சுட்டா... அப்புறம் வேற ஒரு தேடல்.//

அதே...அதே...

தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசி இருக்கும்
தேடல் என்பது உள்ள வரை வாழ்வில் ருசி இருக்கும்.

வாழ்த்துக்கு டேங்ஸ் டீச்சர்.

Sud Gopal said...

இளவஞ்சி:

//இதிலிருந்து யாருமே தப்பமுடியாது
என்றுதான் தோன்றுகிறது...//

ஓ???!!! வாழ்த்துக்கு தேங்ஸ் வாத்யாரே.

WA:
உங்க வாழ்த்துகளுக்கு நன்னி...

Sud Gopal said...

வாங்க புதுமாப்ளை.

//என்ன ஞானம்..என்ன ஞானம்.. ம்ம்.. நடத்து நடத்து//

ஹி.ஹி...எல்லாம் வெங்கி கடை டீ,போண்டா,"ராஜா"வோட மகத்துவம் தான்.

//அப்புறம் அந்த காலேஜ் சமாச்சாரம்.. யாருப்பா அது//

தனியா..இன்னொரு நாளைக்கிப் பொங்கீடுவோம்.

Sud Gopal said...

நிலாவை வழிமொழிந்த ஜொள்ளுப்பாண்டியாரே,உங்களுக்கான பதில் தரப்பட்டுள்ளது.

மனதின் ஓசை said...

நல்லா இருக்கு..நிறைய மேட்டர ஒன்னா வேகமா சொல்லிட்டீங்க பொல இருக்கு..வாழ்த்துக்கள்.

நிலா said...

நேர்மையை மெச்சினோம் :-)

ஆனா இப்படி குறை சொல்லிக்கிட்டே திரியறதுக்கு எப்போ தர்ம அடி வாங்கப்போறேன்னு தெரியலை...

போட்டில நானும் குதிச்சாச்:-)

அடி வாங்கறதுக்குத் தயார் பண்ணிக்கிட்டிருக்கேன் :-))))

ரவி said...

பிரசன்ட் சார்...

Unknown said...

//பத்தாவது வரை ஒழுங்காய்ப் படித்தவர்கள் பன்னிரண்டாம் வகுப்பில் காதல் வலையில் சிக்கிய கதை ஏராளம்.//

போற போக்குல அப்படியே நம்மையும் போட்டுத் தள்ளிட்டுப் போயிட்டீங்களே...
சரி சரி என்ன நான் சொல்லாததையா சொல்லிட்டீங்க.. :)

அன்புடன்,
அருள்.

யாத்ரீகன் said...

ரொம்ப நாளாச்சு உங்க இந்த கதயப்பாக்குறதுக்கு.... என்ன பிரச்சனைனு தெரியல இந்த வலைதளத்தை தடை செய்ஞ்சு வைச்சிருந்தாங்க (அப்படி என்னடா நம்மாளு எழுதியிருகாருனு ஒரே குறுகுறுப்பு :-D) ..

பட படவென பல தளங்களை தொட்டுப்போன மாதிரி இருக்கு... கூடவே.... என்ன சொல்ல.... எதோ அறிவுரைக்கட்டுரை வாசிக்குற மாதிரி இருந்துச்சு நிறைய இடத்துல.. ஒரு இயல்பான நடை இல்லாத மாதிரி ஒரு இடைவெளி... :-(

யாத்ரீகன் said...

நானும் இருக்குற கொஞ்ச நஞ்ச மூளைய கசக்கி, மற்ற எந்த படைப்புகளோட சாயல் வரகூடாதுனு எழுதி பதிஞ்சப்புறம் பார்த்தா போட்டி முடிஞ்சிருச்சு..

உங்களுக்கு வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!

அப்படியே கொஞ்சம் நம்ம பக்கம் வந்து எப்படி இருக்குனு சொன்ன உதவியா இருக்கும்....

குமரன் (Kumaran) said...

காதல் என்பது காமம் என்பதின் இடக்கரடக்கல். ம். சரியாகத் தான் சொல்லியிருக்கிறீர்கள் போலும். வள்ளுவரும் பல இடங்களில் காமம் என்ற சொல்லைத் தான் புழங்கியிருக்கிறார். தற்காலப் பயன்பாட்டில் அந்தக் கருத்துகளை நாம் காமம் என்று சொல்ல மாட்டோம்; காதல் என்று தான் சொல்வோம்.