எந்த ஒரு இரவு நேர இரயில் பயணத்தின் போதும் நான் விரும்பித் தேர்ந்தெடுப்பது அப்பர் பர்த்தைத் தான்.யாருக்கும் தொந்தரவு தரவேண்டியதில்லை.யாருடைய தொந்தரவுக்கும் ஆட்பட வேண்டியதில்லை.இதுவே பகல் நேரப் பிரயாணம் என்றால் எனது தேர்வோ சைட் லோயருக்குத் தான்.காலை நீட்டிக்கொண்டே சன்னல் வழியாக நம்மைக் கடந்து செல்லும் மரங்கள்,மனிதர்கள் என்று மனத்தைக் கண்டபடி செலுத்துவதில் இருக்கும் சுகமே தனி தான்.
இப்படி எண்ணிக் கொண்டே எனது சைட் லோயரில் அமர்ந்து கொண்டே கண்ணை லேசாகத் திறந்து மூடுவதற்குள் அடுத்த ஸ்டேஷன் வந்து விட்டது."ரேவதி 35ஆம் நம்பர் இங்க இருக்கு பாரு.தினேஷ்,அம்மா கையப் பத்திரமாப் புடிச்சிக்க.அந்தக் கறுப்பு பேக்கை இப்படிக் கொடு.குறும்பு பண்ணாம அம்மா கிட்ட சமர்த்தா இருக்கணும்.யாராவது தெரியாதவங்க ஏதாவது சாப்பிடக் கொடுத்தா வாங்கக் கூடாது.பாத்ரூம் போகணும்ணா அம்மா கிட்ட சொல்லணும்.ஒகேவா??"கண்களை மூடிக்கொண்டே மேற்கண்ட சம்பாஷனையைக் கேட்டவுடன், தான் உடன் வாராமல் தன் மனைவி,குழந்தைகளை வழியனுப்ப வந்திருக்கும் ஒரு அப்பாவின் பிம்பம் மனக்கண்ணில் நிழல் ஆடியது.
கணவர் புத்தகங்களுடன் ஐக்கியம் ஆன பின்னர் அந்தத் தாயும்,குழந்தையும் பல்வேறு விளையாட்டுகள் விளையாடினர்.அந்த அப்பாவோ எதோ ஒரு சாமியாரின் 30 நாட்களில் வீடு பேறு அடைவதற்கான வழிகளைப் படித்துக் கொண்டிருந்தார்.குழந்தை கொஞ்ச நேரம் அம்மாவுடன் கீழே விளையாடியதும் தன்னை அப்பாவின் பெர்த்தில் ஏற்றி விடச் சொல்லும்.மேலே போய் சரியாய் மூன்றாவது நிமிடத்தில் போரடித்துப் போய் கீழே இறங்கும்.மறுபடியும் அம்மாவுடன் ஒரு அரைமணி நேரம் விளையாடும்.
இப்படி நான்கைந்து முறை செய்ததும்,"ரேவதிம்மா.தினேஷுக்கு அந்தப் பிஸ்கெட்டையும் பாலையும் கொடுத்துக் கொஞ்ச நேரம் தூங்க வை.கீழயும்,மேலயும் ஏறி,ஏறி இறங்கினதில பய ரொம்பக் களைப்பாயிட்டான் போலிருக்கு.அப்படியே நீயும் கொஞ்ச நேரம் தூங்கு.எப்படியும் வீடு போக ராத்திரி பத்து மணியாயிடும்.வீட்டுக்குப் போய் மீதி விளையாட்டு வெளாடுங்க."இதைக் கேட்டவுடனேயே எந்திரம் போலத் தனது கணவரின் கட்டளைகளை ஒவ்வொன்றாய் நிறைவேற்றிய அந்தத் தாயின் முகம் அவர்களது மனநிலையை உணர்த்தியது.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த எனக்கே இவ்வளவு ஆத்திரமும்,கோபமும் வந்தால் அந்தக் குழந்தைக்கும்,தாய்க்கும் எவ்வளவு ஏமாற்றமும் கோபமும் வந்திருக்கும்.இந்த ஆளுக்கெல்லாம் எதுக்குக் கல்யாணமும்,குழந்தையும் என்று ஆதங்கப் பட்டுக்கொண்டே கொஞ்சம் தூங்கிப் போனேன்.வண்டி ஒசூரை நெருங்கியதும் விழித்துக் கொண்டேன்.
"..அப்படின்னா என்ன அர்த்தம் தெரியுமா? சரி அத விடு.இந்தப் பத்தியில ஸ்வாமீஜீ சம்சார சாகரத்தைக் கடக்கறதப் பத்தி என்ன சொல்றார் தெரியுமா...?" என்று தொடர்ந்த அவரது உரையை இரு குழந்தைகள் மலங்க மலங்க விழித்தபடி கேட்டுக் கொண்டிருந்தனர்.